அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!
அம்மா என்றொரு தேவதை
இரக்கமற்ற
நகரத்து வீதிகளில்
தனித்து விடப்பட்ட
முதியவர்களைக் கடக்கும் போதெல்லாம்
ஊரிலிருக்கும் அம்மாவின்
நினைவு வந்து உறுத்துகிறது.
எத்தனையோ பேர்
சொல்லி விட்டார்கள்
தாயின் பெருமைகளை
இன்னமும்
சொல்லிக் கொண்டேயிருக்கலாம்
தாயின் பெருமைகளுக்கு
முடிவேது?
அம்மாக்கள் அனைவரும்
பிள்ளைகளுக்காகவே
எல்லாவற்றையும்
அளித்துவிட்டு
தங்களை
அழித்துக் கொள்பவர்கள்
அம்மாவைப் பற்றிய
நினைவு வரும் போது
தொலைபேசியில்
சில வார்த்தைகள் பேச,
அம்மாவின் அருகாமை தேடும் ஆசை
தணிவதற்குப் பதில்
பெருகி நிற்கிறது
வாழ்வின் கோரங்களில்
கொடுமையானது
பெற்றவரைப் பிரிவது
என்ன சாதித்து
என்ன பயன்?
அம்மாவின் அருகாமையில்லாமல்.
தொடர் துயரங்களால்
நூலறுந்த பட்டமாய்
அலையும் போது
எங்கோ தூரத்தில் துடிக்கும்
அம்மாவின் இதய ஓசை
நம்பிக்கை தருகிறது புதிதாய்
நானூறு மைல்கள் என்ன
எல்லைகள் தாண்டியும்
நீளுகின்ற உறவு
தொப்புள் கொடி மட்டுமே.
தனிமை இரவுகளில்
அம்மாவின் அருகாமை தரும்
மகத்துவம்
சுமைகளாய் அழுத்துகிறது
மனசை.
வாழ்வின் நிர்ப்பந்தங்கள்
பிரிவுகளில் தொடர்ந்தாலும்
முடிவுறுவதில்லை
பாசத்தின் எல்லைகள்
இரவுகளின் நீளம் முடிவற்ற
இரக்கமற்ற நகர வீதிகளில்
மறுபடியும் கரைந்து போகிறேன்
அம்மாவின் நினைவில்
அடுத்த இரவு வரும் வரையில்.
(குறிப்பு: பத்தாண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில் அம்மாவின்
ஏக்கத்தில் எழுதியது.. இப்போது தான் பதிவேற்றுகிறேன்.)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக