நாட்டின் 67-வது சுதந்திர தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அடிமை விலங்கொடித்து, விடுதலை பெற்றதை நினைவு கூர்வது பெருமைக்குரியதுதான்.
நாட்டின் முதல் குடிமகன் முதல் கடைக்கோடி மனிதர் வரை வாழ்த்துக் கூறுவதும், கோட்டை கொத்தளம் முதல் குடிசை வரை கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடா மகிழ்வது அவசியமானதுதான்.
ஆனால், இது போன்ற விழாக்கள் வெறும் சடங்குகளாக மாறி வருவதும், ஊடகங்களும், வர்த்தக நிறுவனங்களும் இதை லாப நோக்கத்தில் மாற்றி வருவதும் கவலை தரக்கூடியதாகும்.
சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு துறைகளில் எண்ணற்ற வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியாக மட்டும் இருக்கிறது. மனிதர்களிடையே நல்ல பண்புகளையும், மனித நேயத்தையும் வளர்ப்பதில் தவறிவிட்டோம். இதனால் இயந்திரத்தனமான ஒரு சமூக அமைப்பு உருவாகி வருகிறது.
சுதந்திரத்தின் பயனை முழுவதும் அடைந்து விட்டோமா, நாடு எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது, வருங்காலத் தேவையென்ன, எப்படி அதை நிவர்த்தி செய்வது, என்ன மாதிரி பிரச்சனைகள் உருவாகும், அதை எப்படி எதிர்கொள்ள எந்த மாதிரி திட்டங்கள் உள்ளன என்பது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது.
அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரச்சனைகள் இன்னமும் தொடர்வது அவமானகரமான ஒன்றாகும். வறுமை, கல்வியின்மை, அறியாமை, அடிப்படை வசதியின்மை, வேலையின்மை, சமூகத்தில் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமை, குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் இப்படி எண்ணற்ற பிரச்சனைகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.
சாதிச்சண்டைகளும், மதக்கலவரங்களும், இன மோதல்களும் தொடர்கதையாக உள்ளன. நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளும், நெசவாளர்களும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழந்து வெகுநாளாயிற்று. சுயசார்புடன் வாழ்ந்து வந்த விவசாயிகளும், நெசவாளர்களும் தற்கொலை செய்து கொள்வதும், நகர வீதிகளில் தினக்கூலிகளாக அலையும் அவலம் காணச் சகிக்கவில்லை.
நிர்வாக இயந்திரத்தில் ஊழலும், லஞ்சமும் மலிந்து போய் கிடக்கின்றன. முப்போகம் விளைந்த விளை நிலங்கள், ரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் உயிர்ச்சத்தை இழந்து மலடுகளாகி வருகின்றன.
வளர்ச்சி, மேம்பாடு என்ற பெயரால் காடுகளும், மலைகளும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக இவற்றைச் சார்ந்து வாழுகின்ற பழங்குடியினர், விலங்குகள், பறவைகள், வன உயிரினங்கள் எழுப்பும் அபயக் குரல்கள் அரசு இயந்திரத்தின் அதிகார சத்தங்களில் அமுங்கிப் போய்விட்டன. நாட்டில் வாழும் மனிதர்களின் கூக்குரலையே மதிக்காதவர்களின் காதில் வன உயிரினங்களின் அழுகுரலா கேட்டுவிடப் போகிறது?.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்கள், ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு அரசாங்கங்கள் காட்டும் ஆர்வமும், வரவேற்பும், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கிஞ்சிற்றும் இல்லை. கிழக்கிந்திய நிறுவனத்தின் வழியாக வந்த வெள்ளையர்களிடமிருந்து, அளவற்ற தியாகங்கள் செய்து நாட்டை மீட்டுள்ளோம். ஆனால் மீண்டும் அடிமை சாசனம் எழுதும் விதமாக பன்னாட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.
தென் மாநிலங்களுக்கிடையே தண்ணீருக்காக சண்டைகளும், வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் தலைவிரித்தாடும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் சுரண்டல்களும், அதற்கு எதிராக தலையெடுக்கும் தீவிரவாத அமைப்புகளால் பாதுகாப்பற்ற நிலையும் கவலைக்குரியன.
பொதுமக்களுக்கும், அரசுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வரும் இவற்றைக் கட்டுப்படுத்தவும், வேருடன் அகற்றவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் கண்துடைப்பாக இருக்கின்றன. இதன் மூலகாரணத்தைக் கண்டறிந்து இப்பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காண்பதில் காட்டும் ஆர்வம் குறைவுதான்.
வாக்காளரின் அறிவை மயக்கி எப்படி ஓட்டு வாங்குவது, எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது, எப்படி ஆட்சியைப் பிடிப்பது, எந்தெந்த வெளிநாட்டு நிறுவனங்களை இங்கு கொண்டு வருவது, எப்படி பணம், சொத்து சேர்ப்பது போன்றவற்றில் காட்டும் ஆர்வத்தை ஆள்பவர்களும், அதிகார வர்க்கத்தினரும், பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதிலும் சிறிது ஆர்வம் காட்டவேண்டும்.
ஊடகங்களின் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், ஐ.டி.துறை , வளர்ச்சி, பன்னாட்டு நிறுவனங்களின் வருகை போன்றவற்றால் கலாசாரம், பண்பாட்டில் மிகப்பெரிய சீரழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், தொழில், வணிகம், அரசியல், குடும்ப உறவுகள், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், நெசவு, முன்னேற்றம், தன்னிறைவு என எல்லா நிலைகளிலும் ஒருவித தேக்க நிலை நீடித்து வருகிறது. ஆனால், வளர்ச்சி போன்ற மாயத்தோற்றம் கொண்டு இவை மூடி மறைக்கப்படுகின்றன.
சுயபரிசோதனை தனிமனிதனுக்கு எப்படி அவசியமோ, அதே போல நாட்டுக்கும் அவசியம். கடந்து வந்த அறுபத்தாறு ஆண்டு கால வரலாற்றை சற்றே நிதானத்துடன் நோக்கினால் நாட்டின் வளர்ச்சியையும், போக்கினையும் அறிந்து கொள்ள முடியும். அப்போதுதான் கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகள், பிழைகள், சறுக்கல்கள், வளர்ச்சி பற்றிய தெளிவு கிடைக்கும்.
இதை அறிந்து கொண்டால்தான் வருங்காலத்தின் தேவைகளையும், அதை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும், பிரச்சனைகளையும், அதை எதிர்கொள்வதற்கான தீர்வுகளையும் திட்டமிட முடியும்.
நடப்பு நிகழ்வுகள் சுதந்திரத்தின் நோக்கங்களையும், அரசியல் சாசனத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாகவே இருக்கின்றன.
ஆள்பவர்களும், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் இதனை உணர்ந்து செயல்படவேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் மோசமான அனுபவங்களையும், விளைவுகளையும் நமது சந்ததியினர் சந்திக்க நேரிடும். சிந்திப்பார்களா...?
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?”